2 மீனவர்கள் கொலை வழக்கு: இத்தாலிய மாலுமிகள் ஜாமீனில் விடுதலை
திருவனந்தபுரம்: கேரள கடல்பகுதியில் 2 மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான இத்தாலிய கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் இருவருக்கு கேரள உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் உள்பட 2 மீனவர்களை அந்த வழியாக வந்த இத்தாலிய கப்பலான என்ரிகா லெக்ஸியின் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்ற கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் மடக்கிப் பிடித்து கொச்சி துறைமுகத்தில் சிறை வைத்தனர்.
மீனவர்களை சுட்டுக் கொன்ற லதோர் மாஸ்சிமில்லியனோ, சால்வத்தோர் ஜிரோன் ஆகிய 2 பாதுகாப்பு வீரர்களும் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி சிறையில் இருந்து கொச்சி சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இத்தாலிய வீரர்கள் இருவரும் கொல்லம் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் கொல்லம் நீதிமன்றம் அவர்கள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் கொச்சி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் 2 இத்தாலியர்களுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக மீனவர்களைக் கொன்றது தொடர்பாக 2 பாதுகாப்பு வீரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரும் இத்தாலி அரசின் மனுவை கேரள உயர் நிதீமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.