பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய கோழி அருளை கொல்ல முயற்சி
நெல்லை: பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கோழி அருளை ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றுள்ளது.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த ஜனவரி 10ம் தேதி அன்று இரவு திண்டுக்கல் மாவட்டம் நந்தவனபட்டியில் உள்ள அவரது வீட்டு முன் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மூலக்கரை சுபாஷ் பண்ணையார் குடும்பத்தினருக்கும், இவருக்கும் இருந்த வந்த முன்பகையே இதற்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையார் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
மொத்தம் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிலர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கோழி அருள் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார். அவர் தினமும் நெல்லை மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்தில் ஆஜாராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டார். கோழி அருள் சுரண்டை அருகே உள்ள பங்களா சுரண்டை வடக்கு தெருவைச் சேர்ந்த தேவராஜ் மகன் ஆவார். நீதிமன்ற உத்தரவுபடி அவர் தினமும் சுரண்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
கடந்த 10 நாட்களாக ஒரு கும்பல் அவரை பின் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் கோழி அருள் கையெழுதிட்டு வெளியே வந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாள், வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டபடி காவல் நிலையத்திற்குள் புகுந்து கொண்டார்.
உடனே போலீசார் அந்த கும்பலை பிடிக்க வெளியே பாய்ந்தனர். இதைப் பார்த்த அவர்கள் தலைதெறிக்க ஓடினர். இதில் 2 பேர் மட்டும் சிக்கினர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தெர்மல் நகர் ராமநாதன் மகன் கவின், செங்கோட்டை விஸ்வநாதபுரம் கணபதி மகன் அண்ணாத்துரை ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அதன்பிறகு அவர்கள் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கோழி அருள் உயிருக்கு பாதுகாப்பு கருதி அவரும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.