அன்னா ஹசாரே -ராம்தேவ் உண்ணாவிரதத்தில் சலசலப்பு- வெளிநடப்பு செய்தார் கெஜ்ரிவால்

ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிராக அன்னா ஹசாரேயும் ராம்தேவும் தனித் தனியே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இருவரும் இணைந்து டெல்லியில் உண்ணாவிரதம் நடத்துவதாக அறிவித்திருதனர். இதைத் தொடர்ந்து டெல்லியில் காந்தி சமாதியில் இருவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் நாடாளுமன்றம் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலை இருவரும் வந்தடைந்தனர்.
உண்ணாவிரதத்தைத் தொடங்கிய நிலையில் பேசிய பாபாராம்தேவ், வலுவான லோக்பால் மசோதா தேவை என்பதை வலியுறுத்தினார். மேலும் பிரதமர் மட்டும் நேர்மையான இருந்தால் போதாது.. அவரது அமைச்சரவையும் கூட நேர்மையானவர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறினார். மாலையில் பேசிய ராம்தேவ், இனி அடுத்த கட்டப் போராட்டங்கள் கிராமங்களில்தான் இருக்கும் என்றும் தங்அக்ளது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்தின் போது பேசிய அன்னா ஹசாரே, தமது ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நாட்டுக்கு இப்போது தேவையானது வலுவான லோக்பால் மசோதாதான் என்றார்.
ராம்தேவ்- கெஜ்ரிவால் மோதல்
இந்நிகழ்ச்சியில் பேசிய அன்னா ஹசாரேவின் ஆதரவாளர் கெஜ்ரிவால், மன்மோகன்சிங் மற்றும் அவரது அமைச்சரவையினரும் முலாயம்சிங், லாலு பிரசாத், ஜெயலலிதா, மாயாவதி ஆகியோரும் ஊழல்வாதிகள் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
கெஜ்ரிவால் பேசி முடித்ததும் மைக்கைப் பிடித்த ராம்தேவோ, ஒரு குறிப்பிட்ட சிலருக்கு எதிராக நாம் இந்த இயக்கத்தை நடத்தவில்லை. அப்படி அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லியிருக்கக் கூடாது. நாம் சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு யாரும் எதிரிகள் இல்லை என்றார்.
இதனால் கடுப்பாகிப் போன கெஜ்ரிவால் உண்ணாவிரதப் பந்தலைவிட்டு வெளியேறிவிட்டார்.
ஆனால் இதனை கிரண்பேடி மறுத்துள்ளார். கெஜ்ரிவால் உடல்நலக் குறைவு காரணமாகவே ராம்தேவிடமும் அன்னா ஹசாரேவிடமும் சொல்லிவிட்டுத்தான் வெளியேறியதாகக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications