ஏடிஎம்- மில் உதவுவது போல் நடித்து முதியவரிடம் ரூ.25,000 லவட்டிய நபர்
சிதம்பரம்: சிதம்பரத்தில் கனரா வங்கி ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க உதவி செய்கிறேன் என்ற பெயரில் ரூ. 25,000 ரொக்கத்தை அபேஸ் செய்த ஆசாமியை போலீசார் வலை வீசித் தேடி வருகினறனர்.
சிதம்பரம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). அவர் தெற்கு வீதியில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கச் சென்றார். ஏடிஎம் இயந்திரம் உள்ள அறைக்குள் சென்ற அவரிடம் அங்கிருந்த நபர் ஒருவர் தான் பணம் எடுக்க உதவுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜேந்திரன் அந்த நபரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார்.
அந்த நபரும் கார்டை பயன்படுத்தி ரூ.25,000 பணத்தை எடுத்துள்ளார். ஆனால் பணத்தை ராஜேந்திரனின் கையில் கொடுக்காமல் அவரைத் தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து பணத்துடன் தப்பியோடிவிட்டார். உடனே ராஜேந்திரன் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடு வந்து விசாரித்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் பணத்துடன் மறைந்துவிட்டார்.
இது குறித்து ராஜேந்திரன் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணத்துடன் தபிப்யோடிய ஆசாமியை வலை வீசித் தேடி வருகின்றனர்.