பிரதமர், 14 அமைச்சர்களின் ஊழல் குறித்த ஆவணங்களை சோனியாவிடம் கொடுத்த அன்னா குழு
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் 14 அமைச்சர்கள் மீது அன்னா குழுவினர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையில் இருந்து விலகிவிடுதாக பிரதமர் தெரிவித்தார். ஆனால் அன்னா குழு கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். இதையடுத்து தாங்கள் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை சமர்பிப்பதாக அன்னா ஹசாரே தெரிவித்தார்.
அதன்படி அன்னா குழுவைச் சேர்ந்த இருவர் நேற்று மாலை டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டுக்கு சென்று ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்களை அவரது ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
சோனியா காந்தியின் அலுவலகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்களை சமர்பித்துவிட்டோம் என்று அன்னா குழுவைச் சேர்ந்த ராம் மற்றும் கோபால் ஆகியோர் தெரிவித்தனர்.
அன்னா குழுவினர் பிரதமர் மீது ஊழல் குற்ற்ச்சாட்டு கூறினாலும் மன்மோகன் சிங் நல்லவர் என்று ஹசாரே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.