குற்றாலத்தில் சிலிர்க்க வைக்கும் சாரல் மழை
தமிழகம் மட்டுமல்லாது பிற மாநில சுற்றுலா பயணிகளையும் அதிகம் ஈர்க்கும் சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். சீசன் சமயத்தில் மனதை வருடும் இதமான தென்றல் காற்றும் அவ்வப்போது உடலை தீண்டும் மெல்லிய சாரலும், மிதமான மஞ்சள் வெயிலும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு செல்லும்.
குற்றால சாரலில் நனைந்தாலும் ஜலதோஷம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது இல்லை என்பது கூடுதல் சிறப்பு. அதிக உயரத்தில் அமைந்துள்ள மலை வாசஸ்தலங்களில் மட்டுமே கிடைக்கும் குளிர்ச்சியையும், பச்சை பசேல் சூழலும் இங்கு நகர்ப்புற அமைப்பிலேயே கிடைக்கிறது. ஆனந்தம் தரும் மூலிகை அருவி குளியல், படகு சவாரி போன்றவை வயது வித்தியாசமின்றி சீசனுக்கு வரும் அனைவரையும் ஈர்க்கிறது. இதனாலேயே ஆண்டு ஒன்றுக்கு 50 லட்சத்திற்கும் அதிகமானோர் குற்றாலத்திற்கு படையெடுக்கின்றனர்.
தென்மேற்கு பருவக்காற்று இந்தாண்டு மே 1ம் தேதியே வீசத் தொடங்கியதால் ஜூன் முதல் வாரத்தில் சீசன் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து மாலையில் காற்றின் வேகம் அதிகரித்தது. படிப்படியாக மாலை 6 மணி அளவில் திடீரென மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் மெல்லிய மேகக்கூட்டம் திரண்டு பருவநிலை மாறியது. சிறிது நேரத்தில் சீசனுக்கு அறிகுறியாக லேசான சாரல் மழை பெய்தது.
இன்றும் காலை வெயில் இருந்த போதிலும் 11 மணி அளவில் இருந்து வெயில் மறைந்து மேகக் கூட்டம் திரண்டது. மதியம் 2.30 மணிக்கு 30 நிமிடங்கள்
வரை லேசான சாரல் மழை பெய்தது. இன்னும் ஒரு சில தினங்கள் சாரல் தொடர்ந்தால் அருவிகளில் தண்ணீர் விழத்தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.