நட்ட நடு தண்டவாளத்தில் பிரேக்டவுன் ஆன வேன்..குமரி, கோவை ரயில்கள் தாமதம்
நெல்லை: நெல்லை அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வேன் நடுவழியில் பிரேக் டவுன் ஆகி நின்றதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னையில் இருந்து தினமும் மாலை 4.30 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை வந்து பின்னர் கன்னியாகுமரி புறப்பட்டு செல்லும். நேற்று வழக்கம் போல் சென்னையில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வந்தது.
அங்கிருந்து புறப்பட இருந்த நிலையில் மணியாச்சிக்கும், நரைகிணறுக்கும் இடையே உள்ள ரயில்வே கேட்டை அடைத்து சிக்னல் போடுவதற்கு கேட் கீப்பர் தயாரானார். அப்போது அந்த வழியாக ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வேன் திடீரென பிரேக் டவுனாகி நடுவழியில் நின்றது. வேன் டிரைவர் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் கீழே இறங்கி அதை தள்ள முயன்றனர். ஆனால் வேனை நகற்ற முடியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த கேட் கீப்பர் கேட்டை அடைக்காமல் மணியாச்சி ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வந்த கோவை எக்ஸ்பிரஸும் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு வேன் அப்புறப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக கன்னியாகுமரி, கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டன. கேட் கீப்பர் உடனே தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.