ஜெ. ஆட்சி நடக்கவி்ல்லை, ஜெனரேட்டர் ஆட்சிதான் நடக்கிறது-பிரேமலதா

புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரசாரத்தில் தேமுதிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா,
தேமுதிக வேட்பாளர் என்.ஜாகீர் உசேனை ஆதரித்து புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலவிடுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
கட்சி தொடங்கியதில் இருந்து அனைத்து தேர்தல்களையும் சந்திக்கும் கட்சியாக தேமுதிக மட்டுமே திகழ்கிறது. அதனால்தான், 32 அமைச்சர்கள் கொண்ட 52 பேர் அடங்கிய பணக் குழு, முதல்வர் மற்றும் பண, அதிகாரப் பலத்தை எதிர்த்து நிற்கிறோம்.
மக்கள் விரும்பியதால்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால், நாங்கள் எடுத்த முடிவு தவறு என்பதை இந்த ஓராண்டு கால ஆட்சியில் அதிமுக நிரூபித்துவிட்டது.
தற்போது ஜெயலலிதா ஆட்சி இங்கு நடக்கவில்லை. ஜெனரேட்டர் ஆட்சிதான் நடந்து வருகிறது. தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி எந்த நேரத்திலும் மக்களைச் சந்திக்கும் கட்சி தேமுதிக மட்டும்தான். நாங்கள் முறையாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்ற பிறகும் கூட, இடையூறு செய்து வரும் காவல் துறையினர் ஆளும் கட்சியின் ஏவல் துறையாகவே மாறிவிட்டனர்.
தொகுதி முழுவதும் நீடித்து வரும் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் கட்சியின் பொறுப்பில் 10 லாரிகள் மூலம் தினமும் குடிநீர் வழங்குவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications