தமிழர்கள் போராட்ட பயத்தால் ரத்தான ராஜபக்சே உரை
லண்டன்: லண்டனில் இன்று காலை நடப்பதாக இருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உரை ரத்து செய்யப்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் லண்டன் வருகையை எதிர்த்து அங்குள்ள தமிழர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் மான்சன் ஹவுஸில் இன்று காலை நடைபெறுவதாக இருந்த நிகழச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு வைர விழாவையொட்டி இன்று காலை 10 மணிக்கு காமன்வெல்த் வணிக வளாகத்தில் ராஜபக்சே உரை நிகழ்த்துவதாக இருந்தது.
ஆனால் தமிழர்களின் தொடர் போராட்டங்களால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது உரை திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. அவர் உரை நிகழ்த்தி அதை எதிர்த்து தமிழர்கள் அங்கு கூடி போராடினால் அந்த இடமே ஸ்தம்பித்துவிடும் நிலை ஏற்படும். அவ்வாறு நடந்தால் பிற நாட்டு அதிபர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். இதற்கிடையே இங்கிலாந்து போலீசார் உரை நிகழ்ச்சி குறித்து காமன்வெல்த் தலைமையகத்திற்கு தெரிவித்தனர்.
இங்கிலாந்து போலீசார் தம்மால் போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்று தெரிவித்ததையடுத்து தான் இன்று காலை நடப்பதாக இருந்த நிகழ்ச்சிகளை காமென்வெல்த் உயர் அதிகாரி ரத்து செய்துள்ளார்.
இன்று மாலை ராஜபக்சே லண்டன் விமான நிலைய்ததில் இருந்து கிளம்புகிறார். அவர் விமான நிலையம் செல்லும்போது அவரை எதிர்த்து பெரிய அளவில் போராட்டம் நடத்த தமிழர்கள் திட்டமிட்டுள்ளனர்.