புதுக்கோட்டையில் வாக்காளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கிய 3 அதிமுகவினர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் வாக்காளர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கிய அதிமுகவைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை நகரத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் வாக்காளர்களை கவர அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று இலவசமாக வேஷ்டி, சேலைகள் வழங்கி வருவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் கலையரசி உத்தரவின்பேரில் துணை தாசில்தார் தமிழ்மணி தலைமையிலான பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் அலுவலர் சாலை தவவளவன் தலைமையிலான வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அதிமுகவைச் சேர்ந்த ரவிச்சந்திரன், செல்வம், அருண் ஆகியோர் வாக்காளர்களை கவர இலவச வேஷ்டி, சேலை மற்றும் ரெடிமேடு சட்டைகளை பைக்குள் மறைத்து வைத்து வீடு வீடாக கொடுத்தனர்.
அங்கு மறைந்திருந்த தேர்தல் அதிகாரிகள் குழு விரைந்து சென்று அவர்களிடமிருந்து 16 வேஷ்டி, 12 சேலை, 15 ரெடிமேடு சட்டைகளை பறிமுதல் செய்ததோடு, கணேஷ் நகர் காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைத்தனர். போலீசார் அந்த மூன்று பேர் மீதும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பெரியார் நகர் பகுதியின் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக பொதுப் பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.