கத்திரி முடிந்தும் தமிழகத்தில் கடும் வெயில்-வீடுகளை வி்ட்டு வெளியே வர மக்கள் தயக்கம்!
கத்திரி வெயில் முடிந்து 9 நாட்களாகியும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. ஆனால் தென்மேற்கு பருவ மழை துவங்கி உள்ளதால், கேரள மாநிலத்தை ஓட்டிய பகுதிகளில் குளுமையான காற்று வீசி ஆறுதல் அளிக்கிறது. மேலும் வால்பாறை, கொடைக்கானல் பகுதிகளில் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
ஆனால் சென்னை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 106.3 டிகிரி பதிவானது. அடுத்தப்படியாக சென்னை விமான நிலையத்தில் 105.9 டிகிரியும், நுங்கப்பாக்கத்தில் 104.5 டிகிரியும் பதிவானது. புதுச்சேரியில் 107.4 டிகிரி பதிவானது. இதனால் மாலை நேரத்தில் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
திருச்சி, மதுரை மாவட்டங்களில் 102 டிகிரி வெப்பநிலையை ஓட்டியே இருந்தது. தென்மேற்கு பருவ மழை காரணமாக பாளையங்கோட்டை(96.8 டிகிரி), கன்னியாக்குமரி(87.9 டிகிரி), கோவை(91.2 டிகிரி) என்று குறைந்த வெப்பநிலை பதிவானது. மேலும் கேளராவில் தற்போது பருவ மழை பெய்து வருவதால், அப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
கடந்த வாரத்தை விட தமிழகத்தில் வெயில் சற்று குறைந்துள்ள நிலையிலும், மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.