ஒரு ஆணைப் பார்த்து பெண் எப்படி பேசவேண்டுமோ அப்படித்தான் பேசவேண்டும்-விஜயகாந்த்
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் ஜாகிர் உசேனை ஆதரித்து விஜயகாந்த் மாங்கோட்டை என்ற இடத்தில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ரூ.500 கோடி மக்கள் வரிபணத்தில் தமிழகத்தில் ஓராண்டிலேயே சாதித்துவிட்டதாக இந்தியா முழுவதும் விளம்பரம் செய்துள்ள தமிழக முதல்வசர் ஜெயலலிதாவை நீதிமன்றத்துக்கு இழுப்பேன்.
மத்தியஅரசு பெட்ரோல் விலையில் ரூ. 8 உயர்த்தி அதில் ரூ. 2 ஜ குறைத்தது. இதை கண்துடைப்பு நாடகம் என கூறும் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தி அதில் சிறிதளவு குறைத்தது நாட்டியமா?.
சட்டமன்றத்தில் ஒரு ஆணைப் பார்த்து ஒரு பெண் எப்படி பேசவேண்டுமோ அப்படித்தான் பேசவேண்டும். ஆனால்,நாகரிகமில்லாமல் பேசுவதாலும், நாங்கள் மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேச முன்வந்தால் எங்களை கூண்டோடு வெளியேற்றுதை வழக்கமாக கொண்டிருப்பதால் நான் எப்படி அங்கு வரமுடியும். அதனால்தான் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்.
மணல் கொள்ளையே நடக்கவில்லை என முதல்நாள் கூறும் முதல்வர், அடுத்தநாள் அமைச்சர் தங்கமணி மணல் கொள்ளையில் ஈடுபட்டோரிடம் ரூ. 13 கோடி தண்டத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறிதால் மணல் கொள்ளையர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்கிறார்.
முதல்வர் வந்தால் 2 கிலோமீட்டருக்கும் அப்பால் மணிக்கணக்கில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. நான் பேசினால் தேர்தல் விதிமீறல் என்று என்மீது வழக்கு பாய்கிறது.
சேலம் மாநாட்டில் தொண்டர்களின் வேண்டுகோளுக்கினங்க அதிமுகவுடன் கூட்டணி வைத்தேன். நான் தலைகுனிந்தாலும், மக்களை தலை குனிய விடமாட்டேன். என்னைப்பார்த்து திராணி இருக்கிறதா என்றும் கூறும் முதல்வர் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற 5 இடைத்தேர்களை புறக்கணித்துவிட்டு கொடநாடு சென்றது யார்.
இத்தொதியில் அதிமுக தோற்றாலும் ஆட்சியில் மாற்றம் வராது. ஆனால், 4 ஆண்டுகள் மக்களுக்கான ஆட்சியாக மாற்ற முடியும். தேமுதிகவை வெற்றி பெறச்செய்து ஆளும் கட்சிக்கு பாடம் புகட்டுங்கள்.
இம்மாவட்டத்தில் தொழில்சாலைகள் இல்லாததால் வேலைக்காக இளைஞர்கள் வெளிநாடு செல்கிறார்கள். கல்வியையும் விவசாயத்தையும் ஒன்றாக வளர்க்க வேண்டும். அதை நாங்கள் ஆட்சிக்கு வந்தால்தான் செய்யமுடியும். மேலும், குடிநீர், படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில்பயிற்சிகள் அளிக்கப்படும்.
இடைத்தேர்தல்களில் வாக்குக்கு பணம், பொருள் கொடுக்கும் கலாச்சாரம் தமிழகத்தில் இருப்பதால்தான் இங்கு ஆளும்கட்சி வெற்றிபெறுகிறது. மற்ற மாநிலங்களில் அந்த நிலை இல்லை. ஆளும் கட்சி வெற்றி பெற்றால்தான் நல்லது செய்வார்கள் என்பது தவறான பிரச்சாரம் ஆகும்.
இத்தொகுதியில் ஜெ.பிரச்சாரம் மேற்கொள்ள செல்லும் சாலைகள் மட்டும் உடனே சீரமைக் கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் செல்லும் சாலை குண்டும், குழியுமாகவே உள்ளது. அந்தவழியில்தான் நான் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்.
சங்கரன்கோவிலில் அனைத்து கட்சிகளும் போட்டியிட்டது. ஆனால், புதுக்கோட்டையில் நானும் நீங்களும்தானே போட்டியிடுகிறோம். அப்புறம் எதற்கு 32 அமைச்சர்கள், 52குழுக்கள், 5 ஆயிரம் கார்களில் வலம் வரவேண்டும்.
எங்களைப்பார்த்து கொசு என்று கூறுகிறார்கள். இந்த கொசுவை அடிக்க எதற்கு இத்தனை ஆடம்பரம். அப்படி என்றால் இந்த பயமே போதும் இத்தொகுதியில் தேமுதிக வெற்றி பெற்றுவிட்டது.
இப்போது வரும் அமைச்சர்கள் உங்கள் வீட்டு விழாக்களைக்கூட அவர்களே விருந்து கொடுத்து நடத்துவார்கள். ஆனால், 12-ம் தேதிக்குப்பிறகு ஓடிப்போவார்கள்.
இலவசங்களால் ஏழ்மையை போக்கமுடியாது. ஏழ்மையை போக்க அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் இல்லை. 100 ஆண்டு பேசும் ஓராண்டு சாதனை செய்த நீங்கள் இந்த இடைத்தேர்தலுக்கு இத்தனைபேர் ஏன் வரவேண்டும்.
நான் வந்தால் மக்கள் தன்னெழுச்சியாக கூடுவார்கள். ஆனால், அதிமுகவுக்கு காசு கொடுத்தால்தான் கூடுவார்கள். அதிமுக ஆட்சியில்தான் சுனாமி, கும்பகோணம் பள்ளி தீவிபத்து, திருச்சி திருமண மண்ட விபத்து அது மட்டுமல்லாமல் தற்போதும் இவர்கள் ஆட்சியில்தான் சுனாமி வந்துள்ளது. நல்லவர்கள் ஆண்டால் நல்லதே நடக்கும். நான் தொகுதியில் பிரசாரம் செய்ய வந்துள்ளதால் வாக்காளருக்கான பணம் திட்டமிட்டதைவிட அதிகரித்துவிடும்.
ரூ. 75 லட்சம் பறிமுதல் செய்ததை பெரிதாக பேசும் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்காக ஆளும் கட்சி கொண்டு வந்துள்ள ரூ. 1000 கோடியை பாதுகாப்போடு தொகுதிக்குள் அனுப்பி வைத்துள்ளார்கள். அதை, தேர்தல் அலுவலர்கள், காவல்துறை மூலம் ரேஷன் கார்டில் உள்ள பெயர் பட்டியல்படி பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர் என்றார் விஜயகாந்த்.