நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: 4 மாநில அரசுகளின் தொடர்பு குறித்து விசாரணை நடத்துகிறது சிபிஐ
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் மீதான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் மேற்குவங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
மேற்குவங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மொத்தம் 220 நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விவகரங்களைத் தர வேண்டும் என்று 4 மாநிலங்களின் மின்சாரம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகங்களிடம் சிபிஐ இன்று கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களுக்காக யாரேனும் பரிந்துரை செய்திருக்கின்றனரா? என்பது குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் நாட்டுக்கு ரூ1 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருப்பதாக தணிக்கைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஊழல் கண்காணிப்பகத்திடம் பாரதிய ஜனதா கட்சியினர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து சிபிஐ விசாரிக்க கண்காணிப்பகம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையைத் தொடர்ந்து நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைகேடு நிகழ்ந்துள்ளது? அல்லது ஒதுக்கீடு பெற்ற நிலக்கரி சுரங்க நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனவா? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
இதன் முதல் கட்டமாக மாநில அரசுகளிடம் விவரங்களைக் கோரியுள்ளது சிபிஐ.