ரோடு போட்டதாக ரூ.15 லட்சம் மோசடி: என்ஜினியர் உள்பட 5 பேர் மீது வழக்கு
நாகர்கோவில்: வெள்ளமடத்தில் இருந்து சுசீந்திரத்துக்கு செல்லும் ரோட்டை போடாமலேயே பணி முடித்ததாக அலுவலர்களை மிரட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்த நெல்லை கோட்ட பொறியாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
நெடுஞ்சாலை துறை திருநெல்வேலி கோட்ட பொறியாளர் இளங்கோவன், உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜன், கன்னியாகுமரி உதவி பொறியாளர் பிரவீன்குமார், குழித்துறை உதவி பொறியாளர் டென்னிசன், நாகர்கோவில் ஹைவேஸ் ஊழியர் ராஜநாயகம் ஆகியோர் கடந்த 31.1.2011 அன்று குமரி மாவட்டம் வெள்ளமடத்திலிருந்து சுசீந்திரம் செல்லும் ரோடு பணியை செய்யாமலேயே ரோடு போட்டதாகக் கூறி ரூ.15 லட்சம் செக்கில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்களை கையெழுத்திட சொல்லியதாக தெரிகிறது.
இதற்கு நாகர்கோவில் உதவி பொறியாளர் சந்திரா உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அதற்குரிய செக் கொடுக்காமலேயே கணக்கு புத்தகத்தில் வரவு வைத்துள்ளனர். மேலும் செக் புத்தகத்தில் கையெழுத்து போடுமாறு மிரட்டியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உதவி பொறியாளர் சந்திரா இது தொடர்பாக சம்பவதன்று வடசேரி போலீசில் புகார் செய்தார். மேலும் இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 1 ஆண்டு 4 மாதம் முடிந்த நிலையில் வடசேரி போலீசார் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இளங்கோ, தங்கராஜன், டென்னிசன், பிரவீன்குமார் மற்றும் ராஜநாயகம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சினிமா பாணியில் டெண்டர் விட்டு மக்களை ஏமாற்றும் வகையில் போடாத ரோட்டை போட்டதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.