15 மாதத்திற்குப் பிறகு இன்று சென்னை வருகிறார் ராசா!
2ஜி ஊழல் வழக்கில் சிக்கி முதன் முதலில் கைதான திமுக காரர் ராசாதான். தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அவருக்கு நெருக்கடி அதிகரிக்கவே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ராசா கைது செய்யப்பட்டார். திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநராக இருந்த சரத்குமார் உள்ளிட்டோர் வரிசையாக கைதாகி திஹார் சிறைக்குப் போனார்கள். இவர்கள் அனைவருமே தற்போது ஜாமீனில் விடுதலையாகி விட்டனர். இதில் கடைசியாக வந்தவர் ராசாதான்.
ஆரம்பத்தில் அவருக்கு பல நிபந்தனைகளை விதித்திருந்தது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். அதில் ஒன்று அவர் பிறந்த தமிழகத்திற்குப் போகக் கூடாது என்பது. அதை நீக்கக் கோரி சமீபத்தில் மனு செய்திருந்தார் ராசா. இதையடுத்து நிபந்தனையை தளர்த்தியது சிபிஐ நீதிமன்றம்.
இதையடுத்து இன்று மாலை சென்னை வருகிறார் ராசா. அவருக்கு தடபுடலாக வரவேற்பு அளிக்க திமுகவினருக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதே வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்த கனிமொழி சென்னைக்கு வந்தபோது சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு திமுகவினர் ஆரவாரத்தோடு வரவேற்பு அளித்தனர். ராசாவுக்கு அந்த அளவுக்கு இருக்க வாய்ப்பில்லை என்ற போதிலும் சிறப்பான வரவேற்பு தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வந்ததும் நேராக அண்ணா அறிவாலயம் செல்லும் ராசா அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசுவார். இன்றும் நாளையும் சென்னையில் தங்கும் ராசா, ஞாயிற்றுக்கிழமை தனது தொகுதியான நீலகிரிக்குப் போகிறார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு தரப்படும் என்று தெரிகிறது.
புதன்கிழமை திருவாரூரில் கருணாநிதி பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. அதில் ராசாவும் பங்கேற்பார் என்று தெரிகிறது.