திருடனை துரத்துகையில் ரயிலில் இருந்து விழுந்து காலை இழந்த இளம்பெண்
மும்பை: கைப்பையை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை பிடிக்க முயன்ற இளம்பெண் ரயிலில் இருந்து விழுந்ததில் அவரது இடது கால் துண்டானது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியைச் சேர்ந்தவர் பவிகா மேத்தா(24). நடுத்தர வர்க்த்தைச் சேர்ந்த அவர் டியூஷன் எடுத்து சம்பாத்தித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் அவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 20 பேருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். ஊர் திரும்புகையில் அம்ரித்சர் ரயில் நிலையத்தில் இருந்து கோல்டன் மெயிலில் டிக்கெட் எடுத்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே பெட்டியில் பயணிக்கவில்லை. பவிகா மற்றும் 5 உறவினர்கள் ஏசியில்லாத படுக்கைகள் கொண்ட பெட்டியில் பயணித்தனர்.
கடந்த 5ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கையில் அந்த ரயிலில் ஏறிய திருடன் தூங்கிக் கொண்டிருந்த பவிகாவின் கைப்பையை பறித்துக் கொண்டு ஓடினான். உடனே பதறிப்போய் கண்விழித்த பவிகா திருடனைத் துரத்தினார். அவர் திருடனை வழிமறிக்கவே அவன் அவரை தள்ளிவிட்டுவிட்டு ஓடினான். பின்னர் அந்த திருடன் பவிகாவின் கையைப் பிடித்துக் கொண்டு ரயிலில் இருந்த இறங்க முயற்சித்தபோது அவரை கீழே இழுத்துவிட்டான். இதில் பவிகா ரயிலில் இருந்து கீழே விழுந்தார். அம்பாலா ரயில் நிலையத்தை நெருங்குவதால் ரயில் மெதுவாகச் சென்றுள்ளது. கீழே விழுந்த பவிகாவின் இடது காலில் ரயில் சக்கரங்கள் ஏறி கால் துண்டானது.
அவர் போட்ட அலறல் சத்தம் கேட்டு அவரது தந்தை கிரண் ஓடிவந்து காப்பாற்ற ரயிலில் இருந்து குதித்ததில் அவரின் கால் எலும்பு முறிந்தது. பவிகாவின் சகோதரரும் ரயிலில் இருந்து குதித்ததில் அவரும் காயம் அடைந்தார்.
அதற்குள் பவிகாவின் உறவினர்கள் கண் விழி்த்து அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தனர். சுமார் 3 கிமீ தொலைவில் பவிகா ஒற்றைக் காலுடன் உட்கார்ந்திருந்தார். உடனே அவரை சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு 3 முதல் 4 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பவிகாவையும், அவரது தந்தையையும் ஆம்புலன்ஸில் மும்பை கொண்டு வர ரூ.1 லட்சம் செலவானதாகவும், ரயில்வே துறையினர் இது குறித்து கண்டுகொள்ளவேயில்லை என்றும் பவிகாவின் சகோதரி கியாட்டி தெரிவி்த்தார்.
தனக்கு ரயில்வேத் துறை இழப்பீடு வழங்க வேண்டும் என்று பவிகா தெரிவித்துள்ளார். அவரது கைப்பையில் ஹேண்டி கேமரா, பணம் மற்றும் சில முக்கிய பேப்பர்கள் இருந்ததாகவும் அவர் தெரிவி்த்தார்.