கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் பார் ஊழியர்கள் 5 பேர் கைது
கோவில்பட்டி: கோவில்பட்டியில் டாஸ்மாக் பார்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்ட ஊழியர்கள் 5 பேரை கைது செய்தனர். மேலும் 92 மதுபாட்டில்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் பீர், குவாட்டர் மற்றும் கட்டிங் மதுபானங்கள் திருட்டுத் தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுதது மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரவி நாராயணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி பேருந்து நிலையம், ராமசாமிதாஸ் பூங்கா,லட்சுமி மில் ரயில்வேகேட் உள்ளிட்ட 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் டாஸ்மாக் பார்களில் முறைகேடாக மதுபானங்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்து நிலையம் உள்புறம் உள்ள கடையில் நடந்த சோதனையில் பார் ஊழியர் ராஜீவ் நகரைச் சேர்ந்த கண்ணன் கைது செய்யப்பட்டார். இதே போல் கோவில்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பாரில் வேலை பார்க்கும் ராஜா, பேருந்து நிலையம் அருகே உள்ள பார் ஊழியர் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த வேல்முருகன், ராமசாமிதாஸ் பூங்கா பார் ஊழியர் ஜெயக்குமார், லட்சுமி மில் ரயில்வே கேட் பார் ஊழியர் பேச்சிமுத்து ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சோதனையில் 92 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.5, 450 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் நெல்லை மாவட்டத்தில் நடந்த சோதனையில் 20 பேர் வரை சிக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.