தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கில் ஜெல்லி மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கில் ஜெல்லி மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி கடல் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே ஜெல்லி மீன்கள் அதிகளவு தென்படுகின்றன. இவை மருத்துவ குணமோ, பயன்பாடோ அற்றவை என்பதால் மீனவர்கள் இதனைப் பிடிப்பதில்லை. இத்தகைய மீன்கள் அரிப்பு தன்மை கொண்டவை என்பதால் வலையில் சிக்கினால் கூட கையில் படாமல் பிடித்து மீண்டும் கடலில் விடுவது வழக்கம். இவை சிறிய வகை மீன்களையும், விரால் மீன்களையும் விரும்பி உட்கொள்ளும்.
தூத்துக்குடி கடலோர பகுதியில் இவ்வகை மீன்கள் அதிகம் உள்ளன. நேற்று வழக்கம்போல் ஜெல்லி மீன்கள் கரை பகுதிக்கு வந்தபோது திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் அவை மீண்டும் தண்ணீருக்குள் செல்ல முடியாமல் கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கில் இறந்தன. வெள்ளை மற்றும் வெளிர் ரோஸ் நிறம் கொண்ட ஜெல்லி மீன்கள் அதிக அளவில் இறந்து கிடந்தன. பளபளப்பு தன்மை கொண்ட ஜெல்லி மீன்கள் சூரிய ஓளி பட்டு பளிச்சென தெரிவதால் தூத்துக்குடி இன்கோ நகர் பகுதியில் இருந்து தெர்மல் நகர் கடற்கரை வரை கூழ் சிதறியது போல் காட்சியளிக்கிறது.
இது குறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் இறந்த ஜெல்லி மீன்களில் சிலவற்றை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது தமிழகத்தில் இதுவே முதல்முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.