சியாச்சினிலிருந்து படைகளை விலக்குவது குறித்து இந்தியா-பாகிஸ்தான் இன்று பேச்சுவார்த்தை
இஸ்லாமாபாத்: உலகிலேயே உயரமான போர்முனையாக வர்ணிக்கப்படும் சியாச்சின் பனிச்சிகரத்திலிருந்து இருநாட்டுப் படைகளையும் விலக்கிக் கொள்வது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
இமயமலையின் சியாச்சின் பனிச்சிகரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியாகும். அண்மையில் இங்கு ஏற்பட்ட பெரும் பனிப்பாறை சரிவில் சிக்கி 139 பாகிஸ்தான் படையினர் உயிரோடு புதைந்து போயினர். அண்மையில் அவர்கள் நாட்டுக்காக உயிர்நீத்த மாவீரர்களாகவும் பாகிஸ்தான் அரசால் சிறப்பிக்கப்பட்டனர். பாகிஸ்தான் தரப்பில் இருந்து தொடர்ந்தும் சியாச்சினிலிருந்து ராணுவத்தை விலக்க இந்தியாவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சியாச்சின் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பாதுகாப்புத் துறை செயலாளர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு பாதுகாப்பு செயலர் நர்கீஸ் சேத்தியும் இந்தியத் தரப்பில் சஷிகாந்த் சர்மாவும் பங்கேற்கிறார்.
மேலும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட நவீத்தையும் இந்திய பாதுகாப்புச் செயலாளர் சஷிகாந்த் சர்மா சந்தித்துப் பேச உள்ளார்.
ஆனால் பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த ஒரு முக்கியமான அறிவிப்பும் வெளியாகாது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் இது. அதனால் எதனையும் நீங்கள் எதிர்பார்க்காதீர்கள் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஏற்கெனவே கூறியிருந்தார்.
சியாச்சினிலிருந்து ஒரு போதும் படைகளை விலக்கிக் கொள்ளமாட்டோம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று ஏ.கே.அந்தோணி திட்டவட்டமாகக் கூறியிருந்தார். இன்றைய பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் இந்தியத் தரப்பில் இந்த நிலைப்பாடே விளக்கப்படும் என்று தெரிகிறது.