நித்தியானந்தாவை தமிழக அரசு கைது செய்திருக்க வேண்டும்- மக்கள் கருத்து
மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவிடமிருந்து மீட்பதற்காக முதன் முதலில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது கஞ்சனூரில்தான். இங்குள்ள கஞ்சனூர் சுக்கிரன் தலமான சுக்கிரனீஸ்வரன் கோவில், மதுரை ஆதீன மடத்திற்குட்பட்டது. ஆனால் இந்தக் கோவிலை நித்தியானந்தாவின் கைக்குப் போக விட மாட்டோம் என்று வெகுண்டெழுந்தனர் இந்த ஊர் மக்கள்.
சமீபத்தில் கஞ்சனூருக்கு ஆள் பலம், ஆதரவாளர் பலத்துடன் தடபுடலாக வந்த நித்தியானந்தாவுக்கு கருப்புக் கொடி காட்டியும், கார் மீது செருப்புகளை வீசியும் அவர்கள் எதிர்ப்புகளைக் காட்டினர். மேலும் கோவிலுக்கு வந்து அதிகாரமாக கணக்கு கேட்ட நித்தியானந்தாவின் இரு ஆதரவாளர்களுக்கும் சரமாரியாக அடி விழுந்தது.
இந்த நிலையில் நித்தியானந்தா தப்பி ஓடி தலைமறைவாகியிருப்பது கஞ்சனூர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். அவர்ள் கர்நாடக அரசின் கடும் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் அதை கொண்டாடியுள்ளனர்.
கஞ்சனூர் கோயில் மீட்புக் குழு தலைவர் அண்ணாதுரை இதுகுறித்துக் கூறுகையில்,போலி சாமியார் நித்தியானந்தா மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதாற்காக நாங்கள் கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடாவை பாராட்டுகிறோம்.
எங்க ஊர் சுக்கிரன் கோவிலுக்கு பாவம் செய்து வந்தவர்கள் திருந்திதான் போவார்கள். அதிகாரத்தோடு வந்தவர்கள் நசுங்கித்தான் போவார்கள். அப்படித்தான் பல குற்றங்களில் ஈடுபட்ட, பல வழக்குகளில் ஈடுபட்ட நித்தியானந்தாவை எங்கள் கோயில் பகுதிக்கு வரக் கூடாது என்று தடுத்தோம்.
ஆனால், அவர்களோ எங்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்பினார்கள். அதற்கு இந்த கஞ்சனூர் சுக்கிரனீஸ்வரனே நித்தியானந்தாவுக்கு கர்நாடக அரசு மூலம் தண்டனை கொடுத்திருக்கிறது. இந்த கைது நடவடிக்கையை தமிழக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு செய்திருக்கிறது.
எப்படியோ எங்களது கோயிலின் புண்ணியம் கெட்டுப்போகாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார் அண்ணாமலை. கஞ்சனூர் முழுவதும் நித்தியானந்தா தலைமறைவான சம்பவம் பெரும் உற்சாக அலைகளை எழுப்பியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.