டெங்கு முற்றிய பிறகு ஜி.எச்.சுக்கு அனுப்பும் தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!
நெல்லை: டெங்கு காய்ச்சல் முற்றிய பின்னர் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் எச்சரித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் மற்றும் கொசு ஒழிப்பு தொடர்பான 4 மாவட்ட அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது.
கூட்டத்திற்கு பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 3வது முறையாக இன்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து வகை காய்ச்சலும் 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது 60 சதவீதமாக குறைந்துள்ளது. ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 36 பேர் இறந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் கோவில்பட்டியை சேர்ந்த ஒருவர் மட்டுமே இறந்துள்ளார்.
டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆகும். இதில் நெல்லை சுகாதார மாவட்டத்தில் 17 பேரும், சங்கரன்கோவில் சுகாதார மாவட்டத்தில் 12 பேரும் என மொத்தம் 29பேர் இம்மாவட்டத்தில் இறந்துள்ளனர். வருகிற மழை காலத்தில் கொசுக்களை ஒழிக்க இப்போதே நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளோம். சுகாதாரத் துறையையும், உள்ளாட்சி அமைப்புகளையும் அதற்கு ஆயத்தமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டு வருகிறோம்.
மழை காலத்தில் இதை விட கூடுதலாக நோய் பரவ வாய்ப்புள்ளது. கொசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பதே எங்களது நோக்கம். கல்வி நிறுவனங்களில் இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
தனியார் மருத்துவமனைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. சில தனியார் மருத்துவமனைகள் கடைசி கட்டத்தில் நோய் பாதித்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றன. டெங்கு காய்ச்சல் முற்றிய பின்னர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications