உங்களையெல்லாம் அம்மா ராஜா மாதிரி வச்சுருக்காங்களே... அமைச்சர்களை வறுத்த செங்ஸ்!
புதுக்கோட்டை இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இதில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், ஐஜேகே சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 20 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
முன்னதாக அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா புதுக்கோட்டை தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு அமைச்சர் மற்றும் மூத்த நிர்வாகிகளை அதிமுக தலைமை நியமனம் செய்தது.
இதில் பல அமைச்சர்கள் தங்களுடன் வந்துள்ள கட்சி நிர்வாகிகளுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு வசதி, பொழுதுபோக்கு வசதி என பல வசதிகளை செய்து கொடுத்துள்ளார்களாம்.
ஆனால் சில அமைச்சர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொண்டு, தங்களுடன் ஊரில் இருந்து வந்த தொண்டர்களை மட்டும் அம்போ என விட்டுவிட்டார்களாம். இந்த தகவல் அப்படியே பரவி மூத்த அமைச்சர் செங்கோட்டையன் காதுக்கு சென்றது. தொண்டர்களை தவிக்க விட்ட அமைச்சர்கள் பெயரை உளவுத்துறை மூலம் சேகரித்து அவர்களை ஒரு பிடிபிடித்துவிட்டாராம்.
ஊரில் ஒரு ஒதுக்குபுறமாக இருந்த உங்களை எல்லாம் அம்மா (முதல்வர் ஜெயலலிதா) ராஜா போல் வைத்துள்ளார். உங்களை நம்பி வரும் தொண்டர்களுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டாம். கிள்ளயாவது கொடுக்க வேண்டாமா. யார் தவறு செய்தாலும் அம்மா கவனத்திற்கு கொண்டு செல்வேன் என வறுத்தெடுத்துள்ளார்.
இதனையடுத்து அதிமுக தொண்டர்களுக்கும் அமைச்சர்கள் சிலர் பூஸ்ட் கொடுத்து வருகின்றார்களாம். இது ஏற்கனவே தெரிந்திருந்தால் அம்மாவிடமே புகார் செய்து இருக்கலாமே என்று தொண்டர்கள் புலம்புகிறார்களாம்.