வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்தே நித்தியானந்தா சரண்!
பெங்களூர்: நித்தியானந்தா மீது ராம்நகர் மாவட்ட போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்தே நித்தியானந்தா கோர்ட்டில் சரணடைந்தார் என்று கூறப்படுகிறது.
பிடதி ஆசிரமத்தில் ஜூன் 7ம் தேதி நடந்த மோதலைத் தொடர்ந்து நித்தியானந்தா மற்றும் கர்நாடக நவ நிர்மான் சேனா ஆகியோர் மீது போலீஸார் கைது செய்து பலரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் நித்தியானந்தா தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிடதி போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார் நித்தியானந்தா.
இந்த வழக்கு இன்று வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நித்தியானந்தாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அதேசமயம், எந்த அடிப்படையில் நித்தியானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து 15ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்தே நித்தியானந்தா ராம்நகர கோர்ட்டில் சரணடைந்து விட்டார்.