அமெரிக்காவுக்கு பயந்து இந்தியா ஈரானிடம் பெட்ரோல் வாங்க மறுக்கிறது: தா. பாண்டியன் குற்றச்சாட்டு
விழுப்புரம்: முன்பு ஆடு, மாடு, தானியங்களைத் தான் திருடுவார்கள். ஆனால் இன்று ஒரே கையெழுத்தில் ரூ.1.70 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே சமுதாய மாற்றத்தை நோக்கிப் பயணம் செய்கிறது. எங்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. நமக்கு பதவி மீதும் ஆசையில்லை. மற்றவர்களுக்காக உழைப்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியம். காங்கிரஸ் கட்சி கூட 6 சின்னங்களைக் கடந்து வந்துள்ளது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஒரே சின்னத்துடன், ஒரே கொள்கையுடன் பயணம் செய்கிறது.
இந்தியா சுதந்திரத்திற்குப் பின்பு வளர்ச்சியடைந்துள்ளது. அதே போல கொள்ளையும் அதிகரித்துள்ளது. முன்பு ஆடு, மாடு, தானியங்களைத் தான் திருடுவார்கள். ஆனால் இன்று ஒரே கையெழுத்தில் ரூ. 1.70 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளனர். இது எப்படி சாத்தியம் என போலீசாரும், நீதிபதிகளுமே வியந்து போகின்றனர்.
இந்தியாவில் பெட்ரோல் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதன் விலையும் அதிகரித்துள்ளது. குறைந்த விலையில் ஈரான் பெட்ரோல் வினியோகம் செய்கிறது. ஆனால் இந்தியா அமெரிக்காவுக்கு பயந்து ஈரானிடம் இருந்து பெட்ரோல் வாங்க மறுக்கிறது.
தங்கம், டாலர் மதிப்பை உயர்த்தி, பொருளாதார ரீதியில் இந்தியாவை அமெரிக்கா வீழ்த்தி வருகிறது. இந்த நிலையை உருவாக்கிய காங்கிரஸ் அரசை எதிர்த்து ஒரு முற்போக்கு அரசு அமைய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்து வருகிறது என்றார்.