ஜெயலலிதா, நவீன் பட்நாயக்குடன் பேசுவாரா மமதா?
குடியரசுத் தலைவர் வேட்பாளர் குழப்பம் நிமிடத்திற்கு நிமிடம் தாறுமாறாக மாறிக் கொண்டிருக்கிறது. புதிதாக மமதாவும், முலாயமும் வீசியுள்ள ஏவுகணையை காங்கிரஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதை எப்படி சமாளிப்பது என்ற யோசனைகள், ஆலோசனைகளை அக்கட்சி முடுக்கி விட்டுள்ளது.
மறுபக்கம், தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் மமதாவும், முலாயமும் தீவிரமாக குதிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. எப்படியும் பிரணாப் முகர்ஜியைத்தான் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கும் என்ற முடிவுக்கு மமதாவும், முலாயமும் வந்து விட்டனர். எனவே தாங்கள் கூறிய மூன்று பேரில் ஒருவருக்கு ஆதரவு திரட்டும் முடிவை அவர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆதரவைத் திரட்டி வைத்துக் கொண்டு பின்னர் காங்கிரஸை மீண்டும் நெருக்கலாம் என்பது இவர்களின் திட்டமாக தெரிகிறது.
எனவே இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரோடும் அவர்கள் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காங்கிரஸ், பாஜக ஆகியவற்றில் இடம் பெறாத பிற முக்கிய கட்சிகளுடனும் அவர்கள் பேசக் கூடும் என்று தெரிகிறது.
அதேசமயம், ஏற்கனவே சங்மாவை வேட்பாளராக அறிவித்து அவருக்காக ஆதரவும் திரட்டியவர்கள் ஜெயலலிதாவும், நவீன் பட்நாயக்கும் என்பதால் மமதா யோசனைக்கு அவர்கள் இணங்குவார்களா என்பது சந்தேகம்தான் என்றும் கூறப்படுகிறது.