காங். கூட்டணிக் கட்சிகளிடம் கலாமுக்கே ஏகபோக ஆதரவு?
டெல்லி: ஜனாதிபதி பதவிக்கு பிரணாப் முகர்ஜி, ஹமீத் அன்சாரி என காங்கிரஸ் கட்சி பேசிக் கொண்டிருந்தாலும் கூட பல கட்சிகளும் நினைப்பது போல, காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கட்சிகளும் அப்துல் கலாமைத்தான் தங்களது முதல் சாய்ஸாக வைத்துள்ளதாக கருதப்படுகிறது. எனவே கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து காங்கிரஸ் கட்சியும் கலாமுக்கு 'சலாம்' போடக் கூடிய நிலை உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் மீண்டும் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு பலமாக அடிபட ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே பல கட்சிகளின் தலைவர்கள் கலாம் பெயரையே கூறி வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியைத் தரும் வகையில் வலுவான வாக்கு வங்கியுடன் கூடிய மமதா பானர்ஜியும், முலாயம் சிங் யாதவும் காங்கிரஸுக்கு செக் வைக்கும் வகையில் கலாமின் பெயரையும் கூடவே பிரதமர் மன்மோகன் சிங், சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரின் பெயரையும் முன்வைத்துள்ளதால் வேட்பாளர் விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
அப்துல் கலாமிடம் முன்கூட்டியே மமதாவும், முலாயமும் ஆலோசனை நடத்தியதாகவும், அதன் பின்னரை அவரது பெயரை அவர்கள் வெளியிட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இவர்கள் மூன்று பேரின் பெயரைப் பரிந்துரைத்திருந்தாலும் கூட கலாமின் பெயரையே இவர்கள் முதல் சாய்ஸாக முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
காரணம், மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவராக்க நிச்சயம் காங்கிரஸ் சம்மதிக்காது, சோம்நாத்துக்கு சுத்தமாக ஆதரவு கிடைக்காது. எனவே எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியான ஒரே வேட்பாளர் கலாம் மட்டுமே. எனவேதான் கலாமின் பெயரோடு உப்புக்குச் சப்பாக மன்மோகன், சோம்நாத்தின் பெயரையும் சேர்ததுக் கூறியுள்ளனர் மமதா, முலாயம் என்று கருதப்படுகிறது.
இவர்கள் மட்டுமல்லாமல் அப்துல் கலாமுக்கே காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல்வேறு கட்சிகளும் ஆதரவும், விருப்பமும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
திமுக தலைவர் கருணாநிதி கூட முன்பு ஒருமுறை தி.க. தலைவர் கி.வீரமணி, அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்று கூறுகிறாரே என்று கேட்டபோது அதில் நான் முரண்படவில்லை என்றுதான் கூறியுள்ளார். எனவே கலாமை குடியரசுத் தலைவராக்க காங்கிரஸ் முன்வந்தால் அதை திமுகவும் ஆதரிக்கும் என்றே தெரிகிறது.
அதேபோல மேலும் சில கட்சிகளும் கூட கலாமுக்கு ஆதரவாகவே இருப்பதாக தெரிகிறது. அதை விட முக்கியமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியினர், ஏகபோகமாக கலாமுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் கலாமை முதல் முறையாக குடியரசுத் தலைவராக்கியது என்பது நினைவிருக்கலாம்.
இதனால்தான் காங்கிரஸ் கட்சி தயங்குகிறது. மேலும் சோனியா தொடர்பான முந்தைய கலாமின் செயல்பாடுகளும் கூட காங்கிரஸுக்கு பெருத்த தயக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் கூட்டணிக் கட்சிகளிடையே கலாமுக்கு ஆதரவு அதிகரித்தால் வேறு வழியில்லாமல் காங்கிரஸும் கலாம் வழிக்கே வர வேண்டியிருக்கும் என்பதால் காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந் நிலையில் இன்று பிற்பகலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இன்று மாலை சோனியா தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.