சீனா: 2வது கர்ப்பத்திற்கு அபராதம் கட்டாததால் 7 மாத கர்ப்பிணிக்கு கட்டாய அபார்ஷன்
பெய்ஜிங்: சீனாவில் 2வது முறையாக கர்ப்பமானதற்கு அபராதம் செலுத்தாததால் அரசு அதிகாரிகள் 7 மாத கர்ப்பிணிக்கு கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர். இது சீன மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மக்கள் தொகையில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கும் சீனாவில் ஒரு குழந்தை தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதையும் மீறி 2வது முறையாக கர்ப்பமானால் அரசுக்கு பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். இந்நிலையில் ஷான்க்சி மாகாணத்தில் உள்ள ஜென்பிங் கவுன்ட்டியைச் சேர்ந்த பெங் ஜியாமி என்ற பெண் 2வது முறையாக கருவுற்றார். இதையடுத்து அவருக்கு அரசு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஆனால் அவர் அபராதத் தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து அரசு அதிகாரிகள் 7 மாத கர்ப்பிணியாக இருந்த பெங்கை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு இழுத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர். இது தொடர்பான படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படங்களைப் பார்த்து சீன மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்கிற்கு கட்டாய கருக்கலைப்பு செய்யவில்லை என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கட்டாய கருக்கலைப்பை எதிர்த்து பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் சென் குவாங்க்செங் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். கடந்த மாதம் தான் அவர் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பியோடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.