போட்டியெல்லாம் வேண்டாம்... பிரணாப்பை ஆதரிங்க: பி.ஏ.சங்மாவுக்கு தேசியவாத காங்கிரஸ் அறிவுரை
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை கட்சி ஆதரிப்பதால் அதை ஏற்றுக் கொண்டு போட்டியிலிருந்து முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா விலகிக் கொள்ள வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக பி.ஏ.சங்மா இருந்தாலும் அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்த கட்சி ஆதரிக்கவில்லை. அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகள் மட்டுமே சங்மாவை ஆதரித்துள்ளன.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரபுல் பட்டேல் கூறுகையில், நிச்சயமாக் தேசியவாத காங்கிரஸ் சங்மாவை ஆதரிக்காது என்பது திட்டவட்டமாகிவிட்டது. அதனால் அவர் தேர்தலில் போட்டியிடாமலேயே இருக்கலாம். அப்படி அவர் போட்டியிட்டால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் ஒரு மூத்த தலைவர். ஆனால் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறுவார் என நினைக்கவில்லை என்றார் அவர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் சங்மா மீது கட்சி நடவடிக்கை மேற்கொள்ளுமா என்ற கேள்விக்கு, அப்படி நான் சொல்லவில்லை. யாராக இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை எடுக்கத்தானே செய்வார்கள் என்றார்.