காங்கிரசுக்கு மக்கள் பாடம் புகட்டி விட்டார்கள்: ஜெகன் தாயார் விஜயம்மா
ஹைதராபாத்: ஜெகனை சிறையில் அடைத்த காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி விட்டார்கள் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், புலிவெந்துலா தொகுதி எம்.எல்.ஏவுமான விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் நடந்த இடைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 15 சட்டசபை தொகுதிகளையும் நெல்லூர் பாராளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்த வெற்றியை பகிர்ந்து கொள்வதற்காக சிறையில் உள்ள தமது மகன் ஜெகனை சந்தித்து பேசினார் விஜயலட்சுமி. பின்னர் இடைத் தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது.
எங்கள் கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி பல நூறு கோடி ரூபாயை களம் இறக்கியது. ஒரு ஒட்டுக்கு ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டது. இதையும் மீறி ஆந்திர மக்கள் காங்கிரசை தோற்கடித்து விட்டனர்.
இடைத்தேர்தலில் எங்களது கட்சி வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உத்தரவின்படி சி.பி.ஐ. எனது மகன் ஜெகன்மோகனை கைது செய்து சிறையில் அடைத்து. இதனால் நான் ஜெகனுக்கு பதிலாக பிரசாரத்தில் ஈடுபட்டேன். நான் பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் என் மகனை சிறையில் அடைத்த காங்கிரசுக்கு ஆந்திர மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று கூறினேன். நான் கேட்டுக் கொண்டது போலவே ஜெகனை சிறையில் அடைத்த காங்கிரசுக்கு இடைத்தேர்தலில் ஆந்திர மக்கள் பாடம் புகட்டி விட்டனர். இந்த வெற்றி கடவுள் அளித்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.