தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்பு- ஜூலை 9-ல் போராட்டம் நடத்துகிறது புதிய தமிழகம்
தூத்துக்குடி: அதிமுக ஆட்சிக்கு அவதூறு ஏற்படும் வகையில் நடக்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஜூலை 9-ந் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி:
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஓராண்டில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் அமைச்சர் தெரிவித்தார். இது உண்மையில்லை என அப்போதே தெரிவித்தேன்.
மாப்பிள்ளையூரணி கிராமத்தில் பெரும்பான்மையான மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு மனை பட்டா கேட்டு போராடி வருகின்றனர். அரசு அதிகாரிகளோ நிலப்பட்டா மாற்றத்தை, வீட்டு மனை பட்டா வழங்குவது போல் கணக்கு காட்டி அரசை ஏமாற்றி வருகின்றனர். ஒட்டபிடாரம் தொகுதியில் கடந்த மே 20, 21-ந் தேதிகளில் நடந்த மனு நீதிநாள் கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினேன். இதுவரை அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஒட்டுமொத்தமாக செயல் இழந்து விட்டது. தமிழக முதல்வருக்கும், ஆட்சிக்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வருகிற 9ந் தேதி முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது என்றார்.