அமெரிக்கர்களின் வேலையை இந்தியா, சீனாவுக்கு கொடுத்தவர் ரோம்னி: ஒபாமா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி வெளிநாட்டுக்காரர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தருவதில் வல்லவர் என்று அதிபர் ஒபாமாவும், துணை அதிபர் ஜோ பிடனும் தாக்கிப் பேசியுள்ளனர்.
இது குறித்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அட்லாண்டாவில் பேசியதாவது,
மிட் ரோம்னி பணிபுரிந்த நிறுவனம் அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை எப்படி சீனா மற்றும் இந்தியாவுக்கு அள்ளித் தந்தது என்பது குறித்து தி வாஷிங்டன் போஸ்ட்டில் செய்தி வந்திருந்தது. இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு, அந்த நிறுவனத்தின் ஆலோசகர்கள் அவுட்சோர்சிங்குக்கும், ஆப்ஷோரிங்குக்கும் வித்தியாசம் உள்ளது என்று தெரிவித்தனர். நான் ஒன்றும் கிண்டல் அடிக்கவில்லை. அவர்கள் உண்மையாகவே இவ்வாறு தான் கூறியுள்ளனர். வேலையிழந்தவர்கள் இந்த வித்தியாசத்தை புரிந்துகொள்ளவில்லை என்றார்.
துணை அதிபர் ஜோ பிடன் கூறுகையில்,
மிட் ரோம்னி சிங்கப்பூர், சீனா மற்றும் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதில் வல்லவர். மாநில கான்டிராக்டுகளை வெளிநாடுகளுக்கு கொடுக்கக் கூடாது என்று மசாசுசெட்ஸ் சட்டசபையில் மசோதா கொண்டு வந்தபோது அதை ரோம்னி நிராகரித்தார் என்றார்.
ஒபாமா அரசு அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கத் தவறிவிட்டதாக ரோம்னி பதிலடி கொடுத்துள்ளார்.