சிறை நிரப்பும் போராட்டம்: முன்னெச்சரிக்கையாக திமுகவினரை கைது செய்யாமல் இருக்க டிஜிபியிடம் மனு
சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுகவினர் யாரையும் கைது செய்யக் கூடாது என்று திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி டி.ஜி.பி. ராமானுஜத்திடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
திமுக சார்பில் 15.12.2003 அன்று அறவழியில் நடைபெற இருந்த போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆற்காடு வீராசாமி ரிட் மனு தாக்கல் செய்தார். அதற்கு அன்றைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் 12.12.2003 அன்று தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக யாரையும் வீட்டில் சென்று கைது செய்யக் கூடாது. பொது இடத்தில் குற்றம் புரிய முயற்சி செய்தால் அவர்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 151வது பிரிவின் கீழ் கைது செய்யலாம். அறப்போர் மறியலில் ஈடுபடுபவர்கள் அமைதியான முறையில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் ஊர்வலமாக செல்வதற்கும், கோஷங்கள் எழுப்புவதற்கும் காவல்துறை அனுமதித்திட வேண்டும்.
மேலும் ஊர்வலம் தொடங்கும் இடத்தையும் முடிவடையும் இடத்தையும் காவல்துறை எழுத்துப்பூர்வமாக தெரிவித்திட வேண்டும். இந்த இடைப்பட்ட தூரத்தில் எவரையும் கைது செய்தல் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
வருகிற 4.7.2012 அன்று தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறவழியில் மறியல் அறப்போராட்டம் நடைபெற உள்ளது. ஆகவே, மேற்படி உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை கருத்தில் கொண்டு, தாங்கள் காவல்துறையினருக்கு அறிவுறுத்திட வேண்டும் என திமுக சட்டத்துறை சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications