என் மகன் தீவிரவாதியும் அல்ல... மும்பை தாக்குதலில் தொடர்பும் இல்லை: அபு ஜிண்டாலின் தாய் பேட்டி
டெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அபு ஜிண்டால், தீவிரவாதியே அல்ல... தீவிர மத நம்பிககை கொண்டவன் மட்டுமே என்று அவனது தாயார் ரைனா பேகம் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
என் மகன் அபுஜிண்டால் தீவிரவாதி அல்ல. அவன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது. எங்களிடம் எந்த ஒரு மரபணு சோதனையும் நடத்தப்படவில்லை. அவனுக்கு தீவிர மத நம்பிக்கை இருக்கிறது. அதற்காக இப்படியெல்லாம் அவன் செய்ய மாட்டான் என்றார்.
ஜிண்டாலின் உறவினர் ஒருவர் கூறுகையில், கைது செய்யப்பட்ட ஜிண்டாலிடமும் அவனது பெற்றோரிடமும் மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என்றார்.
முன்னதாக ஜிண்டால் கைது செய்யப்பட்ட போது அவனது தந்தை, தனது மகன் ஒரு பயங்கரவாதி எனில் அவனை என் கண் முன்னேயே தூக்கில் போடுங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.