கொலை முயற்சி, பேருந்து எரிப்பு வழக்கில் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்
விழுப்புரம்: பேருந்து எரிப்பு மற்றும் கொலை முயற்சி வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட 4 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 1-6-2008 அன்று புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அது விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் எல்.ஆர். பாளையம் அருகில் சென்றபோது பேருந்தில் இருந்த திருபுவனையை சேர்ந்த மணிபாலன், பத்மநாபன், சந்திரசேகர், திருமா இளங்கோ, எட்டியான் என்கிற வேங்கையன், விஜயன், விழுப்புரம் சுரேந்திரன், சித்தாமூர், சுப்பிரமணி, பாசறை பாலு, சண்முகம், விஜி, தேவநாதன், பார்த்தசாரதி, வடிவேலன், சவுந்திரராஜன், பெருமாள், மகேந்திரன் ஆகியோர் டிரைவர் மோகனை தாக்கி பேருந்தை நிறுத்த உத்தரவிட்டனர்.
படிக்கட்டுகளில் வழி விடாமல் நமது சமுதாயத்தை சேர்ந்தவரை கடலூர் மாவட்டத்தில் வெட்டிக் கொன்றுவிட்டனர். எனவே, நம் தலைவர் திருமாவளவன் கூறியது போன்று பேருந்தில் உள்ளவர்களை அடித்து, உதைத்து, வெட்டிக் கொலை கொல்லுங்கள், பேருந்தையும் கொளுத்துங்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் கண்டக்டர் ஆறுமுகத்தை தலையில் வெட்டினர். டிரைவர் மோகனை தடியால் தாக்கினர். பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு பேருந்துக்கு தீ வைத்து கொளுத்திவிட்டு ஆறுமுகத்திடம் இருந்த ரூ.5,500ஐ பறித்துக் கொண்டு சென்றனர்.
இது குறித்து வளவனூர் போலீசார் மணிபாலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் எண்-2 ல் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்த விழுப்புரம் சுரேந்திரன், சித்தாமூர் சுப்ரமணி, பாசறை பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகிய 4 பேருக்கு மாஜிஸ்திரேட்டு எல்.கலைவாணி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.