தேவாலயத்திற்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய பங்குத்தந்தை உள்ளிட்ட 100 பேர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு தீவைத்த நபர்களை கைது செய்யக் கோரி அனுமதியின்றி மனித சங்கிலி போராட்டம் நடத்திய பங்குத்தந்தை சகாயராஜ் ராயன் உள்ளிட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ளது சொக்கன் குடியிருப்பு. இங்கு புனித யாகப்பர் தனிஸ்லஸ் ஆலயம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் இந்த ஆலயத்திற்கு தீ வைத்ததில் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. இது குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கையில் போதிய வேகம் இல்லை என்றும், குற்றவாளிகளை காப்பாறும் நோக்கோடு மெத்தனம் காட்டி வருவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில் ஆலயத்திற்கு தீ வைத்தவர்களை உடனே கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காந்தி நகரிலிருந்து தட்டார்மடம் ரோடு வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பங்குத்தந்தை சகாயராஜ் ராயன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100 பேர் கலந்து கொண்டனர்.
பேலீசார் அனுமதி இன்றி மனித சங்கிலி போராட்டம் நடத்திய பங்குத்தந்தை உள்ளிட்ட 100 பேர் மீது தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.