மப்டியில் வந்த எஸ்.பிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற மப்பு இளைஞர்கள்
மதுரை: பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது மப்டியில் வந்த நபர் எஸ்.பி. என்று தெரியாமலேயே லஞ்சம் கொடுக்க 4 இளைஞர்கள் பேரம் பேசியுள்ளனர்.
மதுரை அய்யர்பங்களா அருகில் 4 இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி டூ வீலரில் ஒரு நபர் இறங்கியிருக்கிறார். பொது இடத்தில் மது அருந்துவது சட்டப்படி குற்றம் என்று கூறி ஊமச்சிக்குளம் போலீசாரிடம் ஒப்படைக்க முயற்சித்தார். அதுவரை அமைதியாக இருந்த இளைஞர்கள், வந்திருப்பவர் யாரென்றும் கூட கேட்காமல், நாங்கள் அரசுத் தேர்வுக்காக காத்திருப்பவர்கள்.. போலீசுக்குப் போனால் எதிர்காலம் பாதிக்கும். பணம் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கின்றனர், இதற்காக 'ரேட்"டும் பேசியிருக்கின்றனர்.
அசராத அந்த டூவீலர் நபரும் ஊமச்சிகுளம் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போயிருக்கிறார். அப்போதுதான் அந்த இளைஞர்களுக்கே தெரிய் வந்ததாம் டூவீலரில் வந்தது எஸ்பி என்று. டூவிலரில் தனி நபராக மப்டியில் ரோந்து செல்வதை வழக்கமாகக் கொண்டவர் எஸ்.பி. பாலகிருஷ்ணன். அப்படி ரோந்துக்குப் போகும்போதுதான் இந்த இளைஞர்கள் சிக்கியிருக்கின்றனர். பின்னர் மப்பில் இருந்த இளைஞர்களுக்கு "அட்வைஸ்" செய்து எச்சரித்து அனுப்பியிருக்கிறார் எஸ்.பி.












Click it and Unblock the Notifications