பூக்கள் விலை சரிவு: விவசாயிகள் கவலை
குமரி மாவட்டம் தோவளையில் பிரசித்தி பெற்ற பூச்சந்தை உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் இங்கு விற்பனைக்கு வருகிறது.
ஆரல்வாய்மொழி, அவரைக்குளம், குமாரபுரம், பழவூர் ஆகிய பகுதிகளில் பிச்சிப்பூவும், சங்கரன்கோவில், ராஜபாளையம், கோடை ரோடு, மானாமதுரை ஆகிய இடங்களில் இருந்து மல்லிகைப் பூவும் வருகிறது. பெங்களூரில் இருந்து மஞ்சள் கிரேந்தி, ரோஜா மற்றும் அம்பாசமுத்திரத்தில் இருந்து துளசி வருகிறது.
கடந்த சில நாட்களாக பூக்கள் வரத்து அதிகரித்து விலை சரிந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.300க்கு விற்பனையான பிச்சிப்பூ தற்போது ரூ.100க்கு விற்கப்படுகிறது. அதே போன்று ரூ.500க்கு விற்ற மல்லிகைப் பூவும் தற்போது ரூ.100க்கு கிடைக்கிறது. ரூ.100க்கு விற்ற அரளி ரூ.50க்கு விற்கப்படுகிறது. விலை சரிவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பூ வியாபாரிகள் சங்க தலைவர் விஷ்வநாதன் கூறுகையில், சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது பண்டிகை மற்றும் திருமண விழாக்கள் நடைபெறாததால் தேவை அதிகம் இல்லை. இதனால் விலை குறைந்துள்ளது என்றார்.