இந்தியாவில் புதிய தாக்குதல் நடத்த பேஸ்புக் மூலம் ஆள் பிடித்த அபு ஜிண்டால்!
மும்பை தீவிரவாத தாக்குதலின் முக்கியப் புள்ளியான அபு ஜிண்டால் தற்போது டெல்லி போலீஸார் வசம் உள்ளான். அவனிடம் நடத்திய விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் மேலும் ஒரு புதிய தகவலை கக்கியுள்ளான் ஜிண்டால்.
பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு இந்த ஆண்டில் இந்தியாவில் ஒரு பெரும் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்குத் தேவையான ஆட்களை எடுக்கும் பொறுப்பை ஜிண்டால் ஏற்றுள்ளான். இதை பேஸ்புக், இமெயில் மூலம் அவன் நடத்தி வந்துள்ளான். இதற்காக 9 பேஸ்புக் மற்றும் இமெயில் முகவரிகளை அவன் பயன்படுத்தி வந்துள்ளான்.
ஆனால் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஜகியூர் ரஹ்மான் தற்போது சிறையில் அடைபட்டிருப்பதால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அபு ஜிண்டால் வைத்துள்ள அத்தனை பேஸ்புக் மற்றும் இமெயில் முகவரிகளையும் அதிகாரிகள் தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர். அவனது பிரண்ட்ஸ் பட்டியலில் உள்ள அனைத்து இமெயில் ஐடிகளும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.