பிரதமர் பதவி கிடைக்கலைன்னு வருத்தப்படலையே....: பிரணாப் முகர்ஜி
டெல்லி: நாட்டின் பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக தாம் கவலைப்படவில்லை என்று குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் தம்மை வேட்பாளராக அறிவித்து தம்மை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமை கெளரவித்திருக்கிறது. என்னுடைய கட்சி எதை விரும்புகிறதோ அதை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை. மன்மோகன்சிங்கைப் பொறுத்தவரையில் அவர் மிகச் சிறந்த பிரதமர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பி.ஏ.சங்மாவை நான் நேசிக்கிறேன். இருப்பினும் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதம் நடத்தத் தேவையில்லை. விவாதம் என்பது பிரச்சனைகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த ஒரு நிலைப்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. அவர் என்னை ஆதரிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்னைவிட அப்துல்கலாம்தான் சிறந்த நபராக அவர் கருதியதால் அவர் என்னை ஆதரிக்கவில்லை.
அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நிறைய புத்தகங்களைத்தான் படிப்பென். எனக்கு விருப்பமான இடங்களில் நூலகமும் ஒன்று என்றார் அவர்.
1984-ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் பிரதமர் பொறுப்பேற்க விரும்பினார் பிரணாப் முகர்ஜி. ஆனால் ராஜீவ்காந்தி அதை விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியைய்விட்டே வெளியேறியவர் பிரணாப் முகர்ஜி. அதன் பின்னரும் பிரதமர் பதவி மீது ஒரு கண் வைத்தவராகவே வலம் வந்தார் பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.