யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் தொகை 20 விழுக்காடு குறைந்ததாக தகவல்
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மக்கள்தொகை 20 விழுக்காடு குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன..
1981-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 7,34,474 பேர் வசிப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு அந்நாட்டின் மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் துறை எடுத்த கணக்கெடுப்பில் 5,83,071 பேர் வசிப்பதாகத் தெரியவந்துள்ளது. இது 20 விழுக்காடு குறைவாகும்.
தமிழர்கள் வாழும் மற்றொரு பகுதியான மன்னார் மாவட்டத்திலும் 1,05,276 ஆக இருந்த மக்கள் தொகை, இப்போது 99,063 ஆக குறைந்துவிட்டது.
30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து ஏராளமானோர் மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் சென்றுவிட்டதே, மக்கள்தொகை குறைவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள்தொகை 73,886-லிருந்து 92,228 ஆகவும், கிளிநொச்சியில் 90,778-லிருந்து 1,12,872 ஆகவும், வவுனியாவில் 93,694-லிருந்து 1,72,789 ஆகவும் மக்கள்தொகை அதிகரித்துள்ளது.
தமிழர்கள் வாழும் கிழக்குப் பகுதியில் உள்ள திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் மக்கள்தொகை சிறிதளவு அதிகரித்துள்ளது.
இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் மிகக் குறைவான மக்கள்தொகை உள்ளது முல்லைத்தீவில்தான். இலங்கையின் மொத்த மக்கள்தொகை 2,02,77,597.