சிறைக்குப் போக பயப்படுகிறவர்கள் நாங்கள் அல்ல, சொல்கிறார் கனிமொழி
கடலூர் மாவட்டம் மற்றும் சிதம்பரம் நகர தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் குறித்த விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கனிமொழி எம்.பி,
தி.மு.க.வை அழிக்க கட்சியின் 2-ம் நிலை தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து வருகிறார்கள். சிறைக்கு செல்ல தி.மு.க.வினர் தயங்க மாட்டார்கள். சிறைகளை கண்டு அஞ்சுகிற கட்சி தி.மு.க. அல்ல என்றார். அதே சிறைகளை நிரப்ப தோளோடு தோள் நின்று அனைவரும் உறுதுணையாக இருந்து சிறை நிரப்பும் போராட்டத்துக்கு தயாராகுங்கள் என்றும் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஒரு ஆண்டு சாதனை என்பது தன்னையே புகழ்ந்து கொள்வதே ஆகும். மக்கள் வாக்கு அளித்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்காக சட்டமன்றத்தில் பேச முடியவில்லை.
ஜெயலலிதா செய்த சாதனை என்பது தி.மு.க. தலைவர் கலைஞர் கட்டிய சட்டமன்ற கட்டிடத்தையும், அண்ணா நூலகத்தையும் மருத்துவமனைகளாக மாற்றியதுதான். மின்வெட்டு, மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அ.தி.மு.க. ஆட்சியில் வெளிநாட்டினர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முடியாத நிலை உருவாகிவிட்டது. ஏனென்றால் அவர்கள் முதல்-அமைச்சரை சந்திக்க முடியாது. அமைச்சர்களே அவரை பார்த்துபேச முடியாது என்றால் எப்படி வெளிநாட்டினர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முடியும்? ஆனால் கருணாநிதி ஆட்சியில் அவசியம் கருதினால் அவரை எந்த நேரத்திலும் சந்தித்து பேச முடியும் என்று கூறிய கனிமொழி குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மாவை வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்து விட்டு கொடநாடு சென்று ஓய்வெடுத்து வருகிறார் என்றும் கூறினார்.