குற்றால மலைப்பகுதியில் கனமழை: அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
குற்றாலத்தில் கடந்த மாதம் வெறும் 3 நாட்கள் மட்டும் அதுவும் சாரல் மழை தான் பெய்தது. இதனால் மெயினருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் சிறிதளவு தண்ணீர் விழுந்தது. பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் ஒரு நாள் கூட தண்ணீர் விழவில்லை.
இந்நிலையில் ஜூலை மாதத்தின் முதல் நாளான நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லை. இதமான காற்று வீசியது. குற்றாலத்தில் குளுகுளு சூழல் நிலவியதுடன் மாலையிலும், இரவிலும் பலத்த மழை பெய்தது. இதையடுத்து மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவியில் ஆண்கள், பெண்கள் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு வளைவைத் தொட்டுக் கொண்டு தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.
ஐந்தருவியின் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. இந்த சீசனில் முதன் முறையாக புலியருவியில் இன்று அதிகாலை முதல் தண்ணீர் விழத் தொடங்கியது. பழைய குற்றால அருவியில் மட்டும் இன்னும் தண்ணீர் விழத் துவங்கவில்லை. அருவிகளில் தண்ணீர் நன்றாகக் கொட்டத் துவங்கியதால் ஜூலை மாத சீசன் சுற்றுலாப் பயணிகளுக்கும், குற்றாலம், தென்காசி வியாபாரிகளுக்கும் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.