70 வயது மூதாட்டி கழுத்தை நெரித்துக் கொலை .. 60 வயது சகோதரிகள் பரிதவிப்பு!
சென்னை: திருமணம் செய்து கொள்ளாமல் தனது மூன்று சகோதரிகளுடன் தனிமையில் வசித்து வந்த 70 வயது பெண் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார். அவரால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் வேலைக்காரர்தான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.
தனிமையில் இருக்கும் பெண்களுக்கு, குறிப்பாக வயதான பெண்களுக்கு சென்னையில் பாதுகாப்பு குறைவாகி விட்டது. ஆங்காங்கு அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். பலர் நகை, பணத்துக்காக கொலை செய்யப்படுகிறார்கள். இந்த வரிசையில் தற்போது சென்னை புறநகர்ப் பகுதியான பம்மலில், ஒரு 70 வயதுப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்தக் கொலையில் பணமோ, நகையோ பிற பொருட்களோ கொள்ளையடிக்கப்படவில்லை. முன்விரோதத்தில் இது நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
பம்மல், அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் யோவான் பெர்னாண்டஸ். இவருக்கு 70 வயதாகிறது. திருமணம் செய்து கொள்ளவில்லை. பெரும் பணக்காரப் பெண். தனது சகோதரிகளான 65 வயது விர்ஜீனியா ரோட்ரிக்ஸ், 60 வயதான எஸ்தர் ஹாக்கின்ஸ், 57 வயதான ஜேனட் பெர்னாண்டஸ் ஆகியோருடன் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவர்களில் ஜேனட்டுக்கும் திருமணமாகவில்லை. அவர் மதுரையில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் முதல்வராக இருந்து பின்னர் விருப்ப ஓய்வு பெற்று தனது சகோதரியுடன் தங்கியிருந்தார்.
சனிக்கிழமை இரவு நான்கு சகோதரிகளும் சர்ச்சுக்குப் போய் விட்டு வீடு திரும்பினர். பின்னர் முதல் மாடியில் உள்ள தனது அறைக்கு உடை மாற்றப் போனார் யோவான். மற்ற 3 பேரும் கீழே டைனில் அறையில், சாப்பிடுவதற்காக காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் யோவான் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் மேலே சென்றனர். அப்போது தனது அறையில் யோவான் விழுந்து கிடந்தார். அருகில் போய்ப் பார்த்தபோது யோவான் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்திருந்தது தெரிய வந்தது.
அங்கிருந்து எந்தப் பொருளும் திருடு போகவில்லை. பணம் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சங்கர்நகர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர் சகோதரிகள். போலீஸார் விரைந்து வந்து யோவான் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது கழுத்தை நைலான் கயிறால் நெரித்துள்ளனர்.
இதையடுத்து ஜேனட் கொடுத்த புகாரில், தங்களது வீட்டில் முன்பு வேலை பார்த்து வந்த பல்லாவரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து போலீஸார் சிவக்குமாரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
முன்பு வீட்டில் வேலை பார்த்தபோது பணம் திருடியதாக சிவக்குமார் மீது போலீஸில் புகார் கொடுத்தனர் சகோதரிகள். அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த முன்பகையை மனதில் வைத்து யோவானை பழிவாங்கும் வகையில் அவர்கொலை செய்திருக்கலாமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கொலையாளி, சகோதரிகள் மூன்று பேரும் வீட்டுக்கு வருவதற்கு முன்பே உள்ளே புகுந்து யோவான் அறையில் ஒளிந்திருக்க வேண்டும் என்றும் போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.
இந்தக் கொலை குறித்து அப்பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் கூறுகையில், இவர்கள் யாருடனும் பேச மாட்டார்கள், தேவையானால் மட்டுமே வெளியே வருவார்கள். யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்கவும் மாட்டார்கள். தனிமையிலேயே இருப்பார்கள் என்றார்.
சர்ச்சைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர் கூறுகையில், 22 வருடமாக இவர்களைத் தெரியும். ஆனால் யாருடனும் அதிகம் பேச மாட்டார்கள். இவர்களது குடும்பப் பின்னணி குறித்து யாருக்குமே தெரியாது. சர்ச்சுக்கு வருவார்கள், பிரார்த்தனை செய்துவிட்டுப் போய் விடுவார்கள் என்றார்.