ராஜபாளையத்தில் சொந்தக் கட்டிடம் வேண்டி வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நீதிமன்றத்திற்கு சொந்தக் கட்டிடம் வேண்டி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையத்தில் தற்போது இயங்கி வரும் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் வழக்கு விசாரணைக்கு வருபவர்களுக்கு போதுமான இட வசதி, கழிவறை வசதி ஆகியவை இன்றி தவித்து வருகின்றனர்.
இது குறித்து கடந்த திமுக ஆட்சியின்போது வழக்கறிஞர்கள் ராஜபாளையத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நீதிமன்ற கட்டிடம் தேவை என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக அரசு பொறுப்பேற்றதும் ராஜபாளையத்தில் நீதிமன்றத்திற்கு இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்ட இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து ராஜபாளையத்தில் நீதிமன்றத்திற்கு சொந்தக் கட்டிடம் வேண்டி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் தனுஷ்கோடி, குமார், முருகன், கார்த்தீஸ்வரன், மகேந்திரன், பாலசுப்பிரமணியன், வைரமுத்து, முத்துமணி, ஜீவன்ராம், பால்தங்கம், தங்கதுரை, அமிர்தராஜ், கனகராஜ், லட்சுமி நாராயணன், ரமேஷ்பாபு, துரைமுருகன், குமார், சிவகுமார், தங்கமலை உட்பட பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.