புழல் முகாம் அகதிகளை போலீஸ் கொடுமையில் இருந்து முதல்வர் காக்க வேண்டும்: சீமான் கோரிக்கை
சென்னை: புழல் அகதிகள் முகாமில் உள்ள அகதிகளை க்யூ பிரிவு போலீசார் தாக்கிய விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னையை அடுத்த புழல் முகாமில் இருந்துவரும் இலங்கை தமிழர்களை, தமிழக காவல்துறையின் க்யு பிரிவு போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்து இழுத்துச் சென்று, அவர்கள் மீது பொய்யான வழக்குத் தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளனர்.
இராமச்சந்திரன் என்கிற ரமேஷ், காந்தி மோகன் என்கிற சுதர்சன், சுரேஷ் குமார், மற்றொரு சுரேஷ் குமார், சுஜா என்கிற சுஜாந்தன், உமேஷ் ஆகிய 6 பேரை முகாமிற்கு வெளியே வரச்செய்த க்யு பிரிவு போலீசார் அவர்களை அடித்து, உதைத்து இரண்டு வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதைக்கண்ட அவர்களின் குடும்பத்தார் கதறியழுதுள்ளனர்.
எதற்காக இவர்களை அழைத்துச் சென்றனர் என்று கேட்டதற்கு, அங்கிருந்த காவல் துறை உதவி ஆணையர், அவர்கள் ஆஸ்திரேலியா செல்ல படகு வாங்க ஆந்திராவுக்கு சென்றார்கள் என்று காரணம் கூறியவர், சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்கள் செயற்கைக்கோள் தொலைபேசி வைத்திருந்தார்கள் என்று மாற்றி கூறியிருக்கிறார்.
வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அந்த 6 பேரும் சென்னை கடற்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு விசாரணை நடத்திய பிறகு, முகாமின் தலைவர் சொன்னார் என்பதற்காக 4 பேரை விடுவித்துவிட்டு, இராமச்சந்திரன், காந்தி மோகன் ஆகிய இருவர் மீதும் வழக்குத் தொடர்ந்து, திருவொற்றியூர் நீதிபதி முன்பு நிறுத்தி நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இலங்கையில் தமிழினத்திற்கு எதிரான போரில் சொந்தங்களையும், சொத்துக்களையும் இழந்து வரும் தமிழர்களை இப்படி அராஜகத்திற்கு க்யு பிரிவு உட்படுத்துவது ஏன்? இப்பிரச்சனையில் முதல்வர் உடனடியாக கவனம் செலுத்தி, க்யு பிரிவின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், கைது செய்து சிறையில் அடைக்கபட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.