900 முதுகலை ஆசிரியர்கள் பணி தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாணவ, மாணவியர் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு அருகிலேயே மேல்நிலை கல்வி பயில வழி வகை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏற்கனவே கடந்த ஆண்டு 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் மொத்தம் 875 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.
நடப்பு ஆண்டிலும் 100 நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளிகளை தரம் உயர்த்துவதால் மட்டும் தரமான கல்வியை அளிக்க முடியாது.
அதற்கேற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கையும் உயர்த்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, மேல்நிலைப் பள்ளிகளாக உயர்த்தப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு என்று 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும், 100 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40 கோடியே 26 லட்சம் செலவு ஏற்படும். பள்ளிக் கல்வித் துறையில் அரசு எடுக்கும் இந்த நடவடிக்கை, ஊரகப் பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் எந்தவித சிரமமின்றி கல்வி பயில வழி வகுப்பதோடு, தகுதியானோர் ஆசிரியர் பணி பெறவும் ஏதுவாக அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.