இந்திய அரசியல் வரலாற்றிலேயே மோடியை போல் எந்த தலைவரும் கேவலப்படுத்தப்பட்டதில்லை: அத்வானி
இது குறித்து அவர் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதியுள்ள டர்னிங் பாயிண்ட்ஸ் என்ற புத்தகம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அந்த புத்தக்கதின் 9வது அத்தியாயத்தில் உள்ளவை எப்படியோ எனக்கு தெரிய வந்தது. அதில் கலாமின் 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாத குஜராத் சுற்றுப்பயணம் குறித்தும், அதில் ஒரு சில பகுதிகள் குறித்து மட்டும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போன்று வேறு எந்த ஒரு அரசியல் தலைவரும் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நான் அடிக்கடி நினைப்பேன். குஜராத் கலவரம் நடந்தபோது அப்துல் கலாம் குஜராத் செல்ல விரும்பியதாகவும், ஆனால் அவரை தடுத்து நிறுத்துவது போன்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்த நேரத்தில் நீங்கள் குஜராத் செல்வது அவசியமா என்று கேட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடி மற்றும் அவரது அரசு அப்துல் காலமுக்கு முழு ஆதரவு கொடுத்தது. அதையெல்லாம் ஒரு செய்தியாளர்களரும் தெரிவிக்கவில்லை. கலவரம் நடக்கும் இடத்திற்கு எந்த குடியரசுத் தலைவரும் சென்றதில்லை என்றும், அவர் ஏன் அந்த நேரத்தில் குஜராத் செல்ல விரும்புகிறார் என்றும் பலர் கேட்டதாக கலாம் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சமயத்தில் நீங்கள் கண்டிப்பாக குஜராத் செல்ல வேண்டுமா என்று வாஜ்பாய் கேட்டார். ஆமாம் இதை நான் முக்கிய கடமையாக நினைக்கிறேன். நான் அங்கு சென்று நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவேன் என்று கலாம் கூறியுள்ளார்.
அதற்கு பிறகு கலாம் கூறியதை குறிப்பிட வேண்டியது அவசியம்.
"நான் காந்திநகரில் இறங்கியபோது விமான நிலையத்தில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என்று ஏராளமானோர் வந்து எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது ஆச்சரியமாக இருந்தது. கலவரம் பாதித்த 9 இடங்கள் மற்றும் 3 நிவாரண முகாம்கள் என்று 12 இடங்களுக்கு சென்றேன். எனது பயணம் முழுவதும் நரேந்திர மோடி என்னுடன் தான் இருந்தார். அவர் என்னுடன் இருந்ததும் ஒரு வழியில் நல்லதாய் போயிற்று. செல்லும் இடங்களில் பெறப்படும் மனுக்கள் மற்றும் புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு நான் அவருக்கு பரிந்துரை செய்தேன் என்று கலாம் தெரிவித்துள்ளதாக அத்வானி தனது பிளாக்கில் குறிப்பிட்டுள்ளார்.