சவூதிஅரேபியாவின் 'பார்பி' இளவரசிக்கு வந்த சோகத்தைப் பாருங்கள்!
சவூதியை நிர்மானித்த சாத் மன்னரின் பேத்திதான் இந்த சாரா. சவூதி மக்களால் சவூதி அரேபியாவின் பார்பி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார், அவ்வளவு அழகானவர். நன்கு படித்தவர். இரக்க குணம் நிரம்பியவர்.
இந்த நிலையில்அவரது குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக சவூதியை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு வந்துள்ளார் சாரா. அங்கு தற்போது அரசியல் புகலிடம் கோரியுள்ளார் சாரா.
லண்டனில், ரகசிய இடத்தில் தங்கியுள்ள அவர் சண்டே டெலிகிராப் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது மிகவும் பயந்து போயிருக்கிறேன். என்னால் மீண்டும் சவூதி போக முடியாது. அங்கு எனக்கு ஆபத்து உள்ளது. என்னை அவர்கள் கொன்று விடுவார்கள்.
நான் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்தேன். மன ரீதியாக மிகவும் காயப்பட்டுள்ளேன். எனது சொத்துக்களை முடக்கி விட்டனர். ஈரானுக்கு எதிராக நான் இருப்பதால் என்னை வேட்டையாட முயலுகிறார்கள். எல்லா வகையிலும் என்னை முடக்கி வைத்துள்ளனர் என்றார் சாரா.
நான்கு குழந்தைகளுக்குத் தாயான சாரா, தற்போது புகலிடம் கோரி, இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தில் விண்ணப்பித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு லண்டன் வந்த அவர் அன்று முதலே இங்குதான் வசித்து வருகிறார். தற்போதுதான் புகலிடம் கோரி அவர் விண்ணப்பித்துள்ளார்.
38 வயதாகும் சாரா, சவூதி அதிகாரிகள் தன்னை கடத்திச் செல்ல முயன்று வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஒரு சூட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார் சாரா. அவருடன் அவரது நான்கு குழந்தைகளும், இரண்டு நாய்களும் தங்கியுள்ளன. தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை பாதுகாப்புக்காக அமர்த்தியுள்ளார்.
சாரா தனது கணவரை ஏற்கனவே விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபிய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தில் புகலிடம் கோரியிருப்பது சவூதி வரலாற்றிலேயே இதுதான் முதல் என்பதால் சாராவின் புகலிட கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.