குண்டாஸை எதிர்த்து வழக்கு.. சென்னை கொண்டு வரப்பட்ட வீரபாண்டியார்
சென்னை: சேலம் அங்கம்மாள் காலனி குடிசைகளுக்குத் தீவைக்கப்பட்ட வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இன்று சென்னை கொண்டு வரப்பட்டார். அங்கு குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது மனைவி போட்டுள்ள வழக்கின் விசாரணைக்காக அட்வைசரி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார்.
சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது தவறு என அவரது மனைவி லீலா சென்னை அட்வைசரி கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது.
இதையொட்டி இன்று காலை 6.35 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை ஆயுதபடை டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் போலீசார் வேலூர் சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்து சென்றனர். மாலை விசாரனை முடிந்துபின்னர் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்படுவார்.