பாலின சோதனையின்போது என்னை விலங்கு போல நடத்தினர்... பிங்கி குமுறல்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் பிரிவு தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்றவர் பிங்கி. இவர் மீது சமீபத்தில் மேற்கு வங்க காவல்துறையில் ஒரு பெண் பரபரப்புப் புகார் கொடுத்தார். அதில், பிங்கி ஒரு ஆண். அவருடன் நான் சேர்ந்து வாழ்ந்து வந்தேன். அப்போது என்னுடன் பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டார் பிங்கி. பின்னர் என்னைக் கை கழுவி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் பிங்கியைக் கைது செய்தனர். அவருக்குப் பாலினச் சோதனை நடத்தப்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. சிறையிலும் அவர் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார் பிங்கி. வெளியே வந்துள்ள அவர் தன்னை அதிகாரிகள் விலங்கு போல நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், போலீஸ் காவலில் இருந்தபோது என்னை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர், ஒரு மிருகத்தைப் போல என்னை நடத்தினர். திட்டமிட்டு என் மீது பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
என்னை நிர்வாணப்படுத்தி எனக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் வீடியோ காட்சியை வேண்டும் என்றே லீக் செய்துள்ளனர். எல்லாமே திட்டமிட்டு நடந்துள்ளது.
சீதைக்கே அன்று அக்னிப் பரீட்சை வைத்த உலகம் இது. இது எனக்கு நடந்த அக்னிப் பரீட்சையாக நான் எடுத்துக்கொண்டேன்.
இந்த சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து எனக்குத் தெரியவில்லை. நான் சிறையில் இருந்ததால் அதுகுறித்து எனக்குத் தெரியவில்லை. எனது வக்கீலுடன் பேசவுள்ளேன் என்றார்.